Published : 07 Jan 2020 09:55 AM
Last Updated : 07 Jan 2020 09:55 AM

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார் கருப்பசாமிபாண்டியன்

அதிமுகவிலும், திமுகவிலும் கோலோச்சிய அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. கருப்பசாமிபாண்டியன் மீண்டும் அதிமுகவில் சங்கமித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதியான கருப்பசாமிபாண்டியன் 1977-ல் ஆலங்குளம் மற்றும் 1980-ல் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் திமுகவில் இணைந்து, 2006-ல் தென்காசி எம்எல்ஏவானார். திமுகவில் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்தபோது, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் ஒரு கோஷ்டியும், இவரது தலைமையில் ஒரு கோஷ்டியுமாக செயல்பட்டு வந்தனர். கடந்த 2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பிறகு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களையும் அமைப்பு ரீதியாக திமுகபிரித்து நிர்வாகிகளை பொறுப்பேற்க வைத்தது.

பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்களுக்கான தேர்தலில் தனது மகன் சங்கரை வெற்றிபெற வைக்கும் கருப்பசாமிபாண்டியனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அவருக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், திமுக விலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

அதிமுகவுக்கு கடிதம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை, கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையடுத்து திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.

`தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப்போல நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன். திமுகவில் எனது உழைப்பை மதிக்காமல் வஞ்சம் தீர்த்து, அவமானப்படுத்தி வெளியே அனுப்பினர்’ என்று கருப்பசாமிபாண்டியன் அப்போது தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 14-ம் தேதி திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2016 ஜூலை 26-ம் தேதி அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை, கருப்பசாமி பாண்டியனிடம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானதும், இவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அவரை விமர்சித்து பதவியிலிருந்து கருப்பசாமிபாண்டியன் விலகினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதி பொறுப்பாளராக அவரை திமுக தலைமை நியமித்தது. அத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. அதன்பின்னரும் அவருக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. தற்போது அதிமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.

- அ.அருள்தாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x