Published : 03 Jan 2020 08:37 AM
Last Updated : 03 Jan 2020 08:37 AM

10 வாக்குகள் மட்டுமே பெற்று பெண் வெற்றி

திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் 10 வாக்குகளைப் பெற்ற பெண் ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றார்.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை கிராம ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 785. இதில் 6 பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த முறை தலைவர் பதவி சுழற்சி முறையில் பட்டியலினத்துக்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊராட்சி மக்கள், தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தனர். இதன் காரணமாக 6 வார்டுகளிலும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

தலைவர் பதவிக்கு மட்டும் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, சுந்தராச்சி என்ற இரு பெண்கள் போட்டியிட்டனர். கடந்த 27-ம் தேதி இந்த ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தை சேர்ந்த 6 வாக்காளர்களும், இதர சமுதாயத்தை சேர்ந்த 7 பேரும் என மொத்தம் 13 பேர் மட்டுமே வாக்களித்தனர். வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுந்தராச்சிக்கு 2 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது. இந்த ஊராட்சியில் தலைவர் மட்டுமே உள்ளார். வார்டு உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே, வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x