Last Updated : 31 Dec, 2019 05:05 PM

 

Published : 31 Dec 2019 05:05 PM
Last Updated : 31 Dec 2019 05:05 PM

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் காமராஜர் நினைவு இல்ல முகப்பு: அரசு நடவடிக்கை கோரும் விருதுநகர் மக்கள்

விருதுநகரில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் இல்லத்தின் முன்பாக பாதையை வழிமறித்து ஆக்கிரமிப்பு செய்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் சுலோச்சனா தெருவைச் சேர்ந்த குமாராசமிக்கும் சிவகாமி அம்மாளுக்கும் கடந்த 15.7.1903ல் மகனாகப் பிறந்தவர் காமராஜர். 6-ம் வகுப்புவரை படித்த காமராஜர் விடுதலை வேட்கையால் 1915-ம் ஆண்டில் அரசியலில் பங்கேற்றார்.

1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அதனிடையே 1941ல் விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1946ல் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1947ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர்.

தொடர்ந்து, 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவு்ம, 1969 மற்றும் 1971ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர், கடந்த 1975 அக்டோபர் 2-ல் இறந்தார்.

விருதுநகரில் கர்மவீரர் காமராஜர் வாழ்ந்த வீடு தற்போது தமிழக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 4 செண்ட் அளவுள்ள இந்த வீட்டின் தரை தளத்தில் காமராஜர் சிலை, மற்றும் பல்வேறு தலைவர்களுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேல் தளத்தில் காமராஜர் அணிந்திருந்த ஆடைகள், பயன்படுத்திய கட்டில், படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காமராஜர் இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். மாதத்திற்கு சுமார் 1,500 பேருக்கு மேல் காமராஜர் இல்லத்தை பார்த்துச் செல்கின்றனர். காமராஜர் இல்லத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக தமிழக அரசால் ஆண்டுக்கு ரூ.4ம் லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், காமராஜர் இல்லத்தைப் பார்வையிட வருவோருக்கு இடையூராக பாதையை மறித்தும், காமராஜர் இல்லத்திற்கு முன்பாகவும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால், காமராஜர் இல்லைத் பார்வையிட வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் காமராஜர் இல்லத்தின் முன் வாகன காப்பகம் போன்று ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதோடு, பகல் நேரத்திலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து காமராஜர் வாழ்த்தை இல்லத்தை இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக அல்லாமல், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து காமராஜர் புகழையும், அவர் வாழ்ந்த இல்லத்தையும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x