Last Updated : 30 Dec, 2019 03:57 PM

 

Published : 30 Dec 2019 03:57 PM
Last Updated : 30 Dec 2019 03:57 PM

டார்ச் லைட் வெளிச்சத்தில் வாக்களித்த தங்கதமிழ்ச் செல்வன் 

தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில் இன்று காலையில் வாக்குச்சாவடியில் மின்சாரம் இல்லாததால், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் டார்ச் லைட் வெளிச்சத்தில் வாக்களித்தார் .

தேனி மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்காக பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

இப்பகுதிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 7, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 65, ஊராட்சித் தலைவர்கள்: 82, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 744 பேர் என மொத்தம் 898 பதவிகளுக்காக தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

இதில் ஊராட்சித் தலைவர்கள் 7 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 152பேர் என மொத்தம் 159 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எனவே மீதம் உள்ள 739 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 2,176வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பல பகுதிகளிலும் வேட்பாளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கம்பம் ஊராட்சிக்குட்பட்ட ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

இதில் ஆங்கூர்பாளையம் தவிர, மற்ற நான்கு கிராமங்களிலும் காலை 7 மணிமுதல் 10 மணிவரை மின்தடை ஏற்பட்டிருந்தது. இதனால் வாக்காளர்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதே போல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்காளர்களின் விவரங்களை சரி பார்க்கவும் திணறினர்.

காலை 9 மணிக்கு திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் அவரது சொந்த ஊரான நாராயணத்தேவன் பட்டியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்யவந்தார். அப்போது அங்கு மின்சாரம் இல்லாததால் இதுகுறித்து வாக்கு மைய அதிகாரி மற்றும் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து ஆட்சியரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். பின்பு தங்கத்தமிழ்செல்வன் டார்ச்லைட் வெளிச்சத்தில் தனது வாக்கை செலுத்திச் சென்றார்.

இது குறித்து தேர்தல்அலுவலர்கள் கூறுகையில், "மின்வாரியத்திடம் கேட்ட போது டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது என்று கூறினர். வெளிச்சம் குறைவினால் வயதானவர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க சிரமப்படும் நிலை ஏற்பட்டது" என்றனர்.

எச்சரித்த எஸ்.பி...

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி வளாகத்திற்குள் முகவர்கள் அமர்ந்ததால் மாவட்ட எஸ்.பி நேரில் வந்து எச்சரிக்கை விடுத்து அவர்களை வெளியே அனுப்பினார்.

வாக்களித்த ஆட்சியர்..

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுபட்டி இந்து முத்தாலம்மன் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பல்லவி பல்தேவ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x