Published : 30 Dec 2019 11:44 AM
Last Updated : 30 Dec 2019 11:44 AM

மாநகராட்சி, நகராட்சித் தேர்தலுக்குப் பின்னரே வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 27-ம் தேதி நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து ஜனவரி மாதம் 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தாமல், ஒரு பகுதியில் நடந்த தேர்தல் முடிவை வெளியிடுவது குறித்து பலரும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27-ம் தேதி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், “1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவில் அந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தபட்ட தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது. ஆகவே இரண்டு முடிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து முடிவுகளை வெளியிட வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டாலும், எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதுபோன்று இதையும் அறிவிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தலை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நடத்துவதாகத் தெரிவித்தார்.

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டபூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஆகவே தேர்தல் முடிவும் தனித்தனியாக வெளியிடுவதில் தடையில்லை நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர்கள் வெவ்வேறானவர்கள் என கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தி முடிக்கும்வரை , ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் முடிவை வெளியிடத் தடை விதிக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x