Published : 31 May 2014 10:21 AM
Last Updated : 31 May 2014 10:21 AM

லட்சத்தில் புரளவைத்த வட்டி; கோடியில் மூழ்க வைத்த செம்மரம்: அம்பலத்துக்கு வரும் மோகனாம்பாள் ‘ஆட்டம்’

செம்மர கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய டிரான்ஸ்போர்ட்டர் சரவணனின் பின்னணியில் கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் இருந்துள்ளார். செம்மர கடத்தல் தொழிலில் சம்பாதித்த பணத்தில் மோகனாம்பாள் வட்டி தொழிலில் முதலீடு செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவில் கரகாட்ட பெண் கலைஞர் மோகனாம்பாள் (50) என்பவரது வீட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப் பணம், 73 பவுன் தங்க நகைகள், 81 கிராம் வெள்ளி, வீட்டு அடமான பத்திரங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸார் பணத்தை பறி முதல் செய்த தகவலை அடுத்து மோகனாம்பாள், அவரது சகோதரி, சரவணன் ஆகியோர் தலை மறைவாகி விட்டனர். அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கரகாட்ட குடும்ப பின்னணியை கொண்ட மோகனாம்பாள் திருமண மாகாதவர். 20 ஆண்டுகளாக வட்டி தொழிலை சைடு பிசினஸாக செய்துவந்துள்ளார். இதன்மூலம் லட்சங்கள் புரண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மோகனாம் பாள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார். யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இருக்க கரகாட்ட மோகனாம்பாளாகவே இருந்தார்’’ என்கின்றனர் அவரைப் பற்றி தெரிந்தவர்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், காட்பாடி வீட்டில் பறிமுதல் செய்யப் பட்ட பணம் செம்மர கடத்தல் தொழிலில் சேர்த்த பணம் என கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சாதாரண திருட்டு வழக்கில் கைதான சரவணனுக்கு செம்மரக் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பு அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஆந்திர மாநில காடுகளில் இருந்து வெட்டி கடத்தப்படும் செம்மர கடத்தல் சம்பவங்களில் முக்கிய புள்ளியாக சரவணன் இருந்துள்ளார்.

ஓராண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த ஒரு நபருக்காக சரவணன் செம்மரங்களை வெட்டி கடத்தியுள்ளார். போளூர் புள்ளியை ஏமாற்றி குறுகிய காலத்தில் 30-40 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் பார்த்துள்ளார். இதனை அறிந்த போளூர் புள்ளி சரவணனை கடத்திச் சென்று பணத்தை செட்டில் செய்யும் படி மிரட்டியுள்ளார். வேறு வழியில்லாமல் தனது ஹோண்டா சிட்டி கார், நகைகள், ஆடம்பர பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் என அந்த முக்கிய புள்ளியிடம் கொடுத்து சரவணனை மீட்டுள்ளார் அவரது தாய்.

தனது சொத்துகளை பறித்துக் கொண்ட போளூர் பிரமுகரை வேலூர் ஓட்டலில் வரவழைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி னார் சரவணன். இந்த சம்பவத்தில் சரவணன், வேறு ஒரு வழக்கில் அவரது தாய் நிர்மலா, சித்தி மோகனாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சற்று அடக்கி வாசித்த சரவணன், மோகனாம்பாள் உதவியுடன் செம்மரக் கடத்தல் தொழிலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்காகவே காட்பாடியில் ஜமுனாவின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு தங்கியுள்ளனர். செம்மரக் கடத்தல் சம்பவத்தில் கிடைத்த பணத்தை அந்த வீட்டில் பதுக்கியதாகவும், சரவணனின் கடத்தல் தொழி லுக்கு மோகனாம்பாளும் உடந்தையாக இருந்துள்ளார் என்று விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது கதை.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் இவர்கள் வழக்கறிஞர் ஒருவர் மூலம் ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் சரணடையலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பாக மோகனாம்பாள், சரணவனை கைது செய்ய போலீஸார் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x