Published : 28 Dec 2019 05:10 PM
Last Updated : 28 Dec 2019 05:10 PM

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு விருதாவது கிடைத்ததா?- ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரே ஒரு விருதாவது பெற்றுத்தர முடிந்ததா என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரை புறநகர் மேற்கு கழகத்தில் உள்ள திருமங்கலம் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த புளியங்குளம் ,செக்கானூரணி ,கிண்ணிமங்கலம், கரடிக்கல் , கீழ உரப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் செய்தார்.

இந்தப் பிரச்சாரத்தில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஐயப்பன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், ஒன்றியச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மெகா வெற்றிக் கூட்டணியை முதல்வரும், துணை முதல்வரும் உருவாக்கியுள்ளனர். இங்கு போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று 100% உங்களுக்கு பணியாற்றி உங்களுக்கு தேவையான உள் கட்டமைப்புகளை நிறைவேற்றித் தருவார்கள்.

இந்தப் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது அதேபோல் கரடிக்கல் பகுதியில் பஸ்போர்ட் (Busport) உருவாக்கப்பட உள்ளது இதுபோன்ற திட்டங்கள் இன்னும் நிறைய வர உள்ளது

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கபட்டது தற்போது இந்த ஆண்டிற்கும் பொங்கல் பரிசாக1000 ரூபாய் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார். தற்பொழுது அந்தத் திட்டத்தில் உங்களுக்கு வழங்க நினைத்தபோது திமுக நீதிமன்றம் சென்று தடை வாங்கியது. இது உங்கள் பணம் மக்களின் பணம் உங்களுக்கு வழங்குவது என்ன தவறு உள்ளது?

தமிழகத்திலுள்ள 2 கோடி இல்லங்களிலும் பொங்கல் பொங்க வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார் ஆனால் அதை தடுப்பது திமுக தான் நிச்சயம் தேர்தல் முடிந்தபின் தடைகளைத் தகர்த்தெறிந்து பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை.

இந்தியத் திருநாட்டில் 29 மாநிலங்கள் உள்ளன. இதில் 18 பெரிய மாநிலங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து அதில் சிறந்த நிர்வாகம், சட்டம் ஒழுங்கு ,என பத்து துறைகளை பட்டியல் எடுத்து ஆய்வு மேற்கொண்டு இதில் பச்சைத்தமிழர் முதல்வர் தலைமையிலான தமிழக அரசு முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் கோப்பையை பெறுவதைக் காட்டிலும், உலகக் கோப்பையைக் காட்டிலும் இந்த விருது மிக உயர்ந்ததாக தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இந்த விருது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கிடைத்த பெருமையாகும்.

ஸ்டாலின் இந்தியத் தாயின் பரிசு தமிழ் தாய்க்கு கிடைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்து வருகிறார். ஐந்து முறை திமுக தமிழகத்தில் ஆட்சி செய்தபோது இதே போல் ஒரு விருது அல்லது ஒரு பரிசை பெற்று தந்தது உண்டா?

இரண்டாம் இடம், மூன்றாம் இடம்பிடித்த மாநிலங்கள் எல்லாம் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் முதல்வரை சாதாரண ஆளாக நினைத்தோமே அவரோ இன்று பிற மாநில முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் முதல்வராக உள்ளாரே என்ற குரோத்தால் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

ஸ்டாலின் எந்த நல்ல திட்டங்கள் எதை செய்தாலும் குற்றம் காண வேண்டும் என்ற நிலையில் தான் உள்ளார். இந்தப் பெருமை ஒட்டுமொத்த தமிழருக்குக் கிடைத்த பெருமை என்று நினைக்கவில்லை. அவரும் இந்த தமிழகத்தை சார்ந்தவர்தானே என்று அவர் நினைக்கவில்லை.

நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் முதல்வர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றபோது மக்களோடு மக்களாக வரிசையாக நின்று வாக்களித்தார். அவருடன் காவல் துறை சார்ந்த யாரும் பாதுகாப்பிற்காக நிற்கவில்லை. ஏனென்றால் அவர் எளிமையான முதல்வருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். சீன அதிபரும் ,பாரதப் பிரதமரும் தமிழகத்திற்கு வந்தனர். அதில் சீன அதிபர் தமிழகத்தின் பாரம்பரிய ஏற்பாடு என் மனதை கவர்ந்தது என்று கூறினார் அதேபோல் பாரதப் பிரதமரும் முதல்வரைப் பாராட்டினார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததினால் இருநாட்டு தலைவரும் தமிழகத்தை தான் தேர்ந்தெடுத்தார்கள்.

முதல்வருக்கு பெருமை சேர்ந்தால் நமது வாழ்க்கை சூனியமாகிவிடும் என்று ஸ்டாலின் தமிழகம் முதலிடத்தை பிடித்ததிற்கு அரசியல் சாயம் பூச பார்க்கிறார்

இன்றைக்கு முதல்வர் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்கியுள்ளார். குறுகியகாலத்தில் அதிக மக்களை சந்தித்துள்ளார். குறுகிய காலத்தில் கோப்புகளை நிலுவையில் இல்லாமல் செய்துள்ளார். கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளார். இப்படி அடுக்கடுக்கான சாதனைகள் செய்து இரவு பகல் பாராமல் உழைத்து தமிழகத்திற்கு விருதினைப் பெற்றுத் தந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து திமுக கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x