Published : 27 Dec 2019 05:58 PM
Last Updated : 27 Dec 2019 05:58 PM

முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: அமைதியாக நடந்து முடிந்தது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெற்ற முதற்கட்டத் தேர்தல் ஓரிரு சம்பவங்களை தவிர பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் 2016-ம் ஆண்டு நடக்கவேண்டியது ஆனால் 3 ஆண்டுகள் நடத்தாமல் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த மாத முதல் வாரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டுக்கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தத்தேர்தலில் 4 வித வண்ணங்களில் 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. கிராம ஊராட்சி உறுப்பினர் – வெள்ளை வாக்கு சீட்டு, கிராம ஊராட்சி தலைவர் – இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – பச்சை நிற வாக்குச் சீட்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள் நிற வாக்குச்சீட்டு. மேலும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்படுன் நடைபெற்றது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் , ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x