Published : 27 Dec 2019 04:44 PM
Last Updated : 27 Dec 2019 04:44 PM

போக்குவரத்து, கைச் செலவுக்கு பணம்: வெளியூர் வாக்காளர்கள் பொறுப்பாக வந்து வாக்களித்த ‘சுவாரசியம்’

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வெளியூர்களில் வேலைபார்த்து வந்தவர்கள், இன்று சொந்த ஊர்களுக்குத் திரும்பி பொறுப்பாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ஆனால், வெளியூரில் உள்ள வாக்காளர்கள் சொந்த ஊருக்கு வர போக்குவரத்து செலவு, கை செலவு என எல்லாவற்றையும் வேட்பாளர்களே கவனித்துள்ளனர் என்பதுதான் இதில் சுவாரஸ்யம்.

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் முதற்கட்ட தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. தென் மாவட்டங்களில் மாவட்ட பிரிப்பால் தென்காசி, திருநெல்வேலியைத் தவிர மற்ற மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

மதுரை மாவட்டத்தில் இந்த முதற்கட்ட தேர்தலில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 101 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 180 கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், 1,115 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது.

இந்த முறை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்காததால் நகர்புறங்களை சேர்ந்த கட்சிக்காரர்கள், வேட்பாளர்கள் உறவினர்கள், அனைவரும் புறநகர் கிராமங்களில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

மதுரையில் கிராம பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தல் கட்சிகளுக்கு அப்பார்ப்பட்டு சுவாரசியமாகவும், வழக்கத்தைவிட விறுவிறுப்பாகவும் நடந்தது.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்கள், புறநகர் பகுதிகளை சேர்ந்த படித்த, படிக்காத இளைஞர்கள், பெரும்பான்மையானவர்கள், கோவை, திருப்பூர், சென்னை, ஓசூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தங்கி பணிபுரிகின்றனர்.

அதுபோல், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் வெளியூர்களில் குடும்பமாக நிரந்தரமாக தங்கி பல்வேறு தொழில்கள் செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு வாக்குகள், அவரவர் சொந்த கிராமங்களிலேயே உள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரும், 4 வாக்குகளை பதிவு செய்வதோடு, ஒரு சில வாக்குகளிலே சில வேட்பாளர்கள் வெற்றி, தோல்விகள் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. அதனால், வேட்பாளர்கள் வெளியூர்களில் வசிக்கும் தங்கள் ஆதரவு வாக்காளர்களுக்கு அவர்கள் வங்கி அக்கவுண்ட்டில் பணத்தை செலுத்தி அவர்களை சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க வரவழைத்தனர்.

சென்று வர போக்குவரத்து செலவு, கை செலவுக்கு பணம் என்று வேட்பாளர்கள் கவனித்ததால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வெளியூர் வாக்காளர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அதனால், மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ்நிலையங்களில் நள்ளிரவே திருவிழா போல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெளியூர் வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், சென்னை, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

அப்படியிருந்தும், வெளியூர்களில் இருந்த மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் வந்த அரசு பஸ்களில் நேற்று இரவு கூட்டம் அமோதியது. அமருவதற்கு இடம் கிடைக்காமல் பயணிகள் படிக்கட்டுகளில் பஸ்சில் நடைபாதைகளில் அமர்ந்துகொண்டு சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க ஆர்வமாக திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x