Published : 27 Dec 2019 01:31 PM
Last Updated : 27 Dec 2019 01:31 PM

உள்ளாட்சித்தேர்தல்: இரவில் தனியாக தந்தையின் சமாதிக்கு வந்து வணங்கிச் சென்ற ஸ்டாலின்

கோப்புப் படம்

உள்ளாட்சித்தேர்தல் நடப்பதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு தனியாக தந்தையின் சமாதிக்கு வந்து வணங்கிவிட்டுச் சென்றார்.

திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுகின்றன. இரண்டு மிகப்பெரிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் தங்கள் கட்சிகளை கட்டுக்கோப்பாக ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் நடத்திச் செல்கின்றனர்.

இரண்டுக்கட்சிகளும் சம பலத்துடன் நிற்கின்றன. அதிமுக ஆட்சியில் இருப்பதால் கட்சி பலமாக இருப்பது போன்ற தோற்றம் உள்ளது என ஒரு சாரர் தெரிவிக்கின்றனர். ஆட்சியில் இல்லாத திமுக கருணாநிதி மறைவுக்குப்பின் ஒருங்கிணைந்து ஸ்டாலின் தலைமையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து 100 சதவீத வெற்றியையும் பெற்றது என்கின்றனர்.

தற்போது உள்ளாட்சித்தேர்தல் நடப்பதை ஒட்டி இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. பொதுவாக பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் நேரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர், பட்ஜெட் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அதிமுக அமைச்சர்கள், முதல்வர்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதே போன்று திமுக சார்பில் முக்கிய நிகழ்வுகளில் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இன்று உள்ளாட்சித்தேர்தலில் முதன்முதலில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் நேற்றிரவு திமுக தலைவர் ஸ்டாலின் தனியாக காரில் வந்து தனது தந்தை கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

இரவு 8-00 மணிக்குமேல் திடீரென அவர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். உடன் துரைமுருகன் தவிர கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

ஸ்டாலின் வரும் தகவல் போலீஸாருக்கும் தெரியாது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, பொதுவாக ஸ்டாலின் மாதாமாதம் தனது தந்தை மறைந்த 7 மற்றும் அடக்கம் செய்யப்பட்ட 8 தேதிகள் ஏதாவது ஒரு தேதியில் மாதாமாதம் தான் சென்னையில் இருந்தால் கட்டாயம் வந்து வணங்கிவிட்டு, சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்வார்.

ஒருவேளை அந்தத்தேதியில் ஊரில் இல்லாவிட்டால் அதற்கு முன்னரே வந்து வணங்கிவிட்டுச் செல்வார். ஆகவே அவர் திடீரென வந்தது எங்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலும் அப்படித்தான் திடீரென வந்து வணங்கிவிட்டுச் செல்வார் என்றனர்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்கிற பொறுப்புடன் வாழ்ந்துவரும் ஸ்டாலின் கருணாநிதி மீது மிகுந்த பாசம் வைத்துள்ள மகன்.

அவர் வருவதையும் போவதையும் தந்தை மகனுக்கு இடையே உள்ள நிகழ்வாக பார்ப்பதால் யாருக்கும் தெரிவிக்காமல் வந்து செல்கிறார். நேற்றைய நிகழ்வும் அப்படியே நடந்துள்ளது. உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு என்பதால் தந்தையின் சமாதிக்கு வந்துள்ளார் என கட்சிக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகத்திறமைமிக்க தலைவராக மேயராக, துணை முதல்வராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக தன்னை நிரூபித்துள்ளார். ஆனால் அவரை திறமையில்லாதவர்போல் சித்தரிக்க முயலும்போக்கு தமிழக அரசியல் நடக்கிறது.

ஆனால் கருணாநிதியிடம் ஒருமுறை ஸ்டாலின் பற்றி சொல்லுங்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் கூறியது, “உழைப்பு..உழைப்பு...உழைப்பு...அதுதான் ஸ்டாலின்” என்று பதிலளித்தார் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x