Published : 22 Dec 2019 10:23 AM
Last Updated : 22 Dec 2019 10:23 AM

போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கத் தடை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவு 

திமுக பேரணி நடைபெறவுள்ள நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், இச்சட்டத்துக்கு ஆதரவளித்த அதிமுகவைக் கண்டித்தும் வரும் 23-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னையில் 'குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி' திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ''மாநகர போக்குவரத்துக் கழகம் ஒரு அத்தியாவசியப் போக்குவரத்துச் சேவையை முழுவதுமாகப் பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம் என்பதும், பொதுமக்களுக்கு அன்றாடம் சேவை செய்யக்கூடிய முக்கியமான பொறுப்புள்ள நிறுவனம் என்பதும் நமது தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்ததாகும்.

எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகிற 23.12.2019 (திங்கட்கிழமை) அன்று வழக்கம் போல் பணிக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 23.12.2019 அன்று வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் அறிவிப்புப் பலகை மூலமாக அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கிளை மேலாளர்கள், பிரிவு மேலாளர்கள், அனைத்து மண்டல மேலாளர்கள்,பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x