Last Updated : 21 Dec, 2019 05:30 PM

 

Published : 21 Dec 2019 05:30 PM
Last Updated : 21 Dec 2019 05:30 PM

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வடகரையில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தென்காசி

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தென்காசி மாவட்டம் வடகரையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணி நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததால், வடகரை தைக்க திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் ஜாபர்அலி உஸ்மானி, தமுமுக மாநிலச் செயலாளர் நயினார் முரம்மது, செய்யது முகம்மது கருத்தப்பா (முஸ்லிம் லீக்), இனயத்துல்லா (அமமுக), அப்துல் பாஸித் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), சேக் முகம்மது ஒலி (எஸ்டிபிஐ), லத்தீப் (டிஎன்டிஜே), இஸ்மாயில் (தமுமுக) சாகுல் உலவி, சாகுல்கமீது வாகிதி, இஸ்மாயில் பைஜி, அப்துர்ர்குமான் நூரி, முகம்மது யூசுப் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி வடகரை பகுதியில் பல்வேறு இடங்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x