Published : 20 Dec 2019 09:30 PM
Last Updated : 20 Dec 2019 09:30 PM

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17 பேர் பலியான விபத்து: சுவருக்கு சொந்தக்காரருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை

மேட்டுபாளையம் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுவரின் உரிமையாளர் சிவ சுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் வசித்த 17 பேர் பலியாகினர். டிசம்பர் 2-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு செய்து கடந்த 3-ம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது.

எந்த உள் நோக்கத்துடன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால், தனக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. இன்று தீர்ப்பளித்த நீதிபதி சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

1 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கொண்ட இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x