Published : 17 Dec 2019 04:28 PM
Last Updated : 17 Dec 2019 04:28 PM

27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்: 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல்

டிச.27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை ஒட்டி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தது. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் முறையாக மறுவரையறை, இட ஒதுக்கீடு செய்த பின்னர் அறிவிக்கப்பட வேண்டும் என திமுக வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்ததை அடுத்து டிச.2-ம் தேதிக்குள் அறிவிப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதற்கு முன் 7 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் திமுக நீதிமன்றம் சென்றது. அதில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்த புது அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டது. அதன்படி டிச. 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் எனவும், டிச. 9 முதல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. மனுத்தாக்கல் செய்ய 16-ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி (இன்று) நடைபெறும். வேட்புமனு வாபஸ் இறுதித் தேதி டிச.19-ம் தேதி ஆகும்.

இந்நிலையில் நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் குறித்த விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு விவரம்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 2,06,657
கிராம ஊராட்சித் தலைவர் - 54,747
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 32,939
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 3992
மொத்தம் - 2,98,335

டிச. 27, 30 தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x