Published : 10 Dec 2019 09:24 AM
Last Updated : 10 Dec 2019 09:24 AM

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின், ராமதாஸ், தினகரன், சுப்ரமணியன் சுவாமி உட்பட 12 பேர் வழக்கு: அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்துப் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், ஐ.பெரியசாமி, டி.எம்.செல்வகணபதி, செந்தில் பாலாஜி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் கடந்த 2013 முதல் 49 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 12 பேர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்குகளில் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யாத வழக்கு களுக்கும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x