Published : 07 Dec 2019 07:56 AM
Last Updated : 07 Dec 2019 07:56 AM

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்று எரிசக்தியை கண்டுபிடிக்க வேண்டும்: பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை வலியுறுத்தல்

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்று எரிசக்தியைக் கண்டுபிடிக்க வேண்டும் என பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் சிவதாணு பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில், 9-வது டான் எனர்ஜி மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. ஃபிக்கி அமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவர் வி.கவிதா தத் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில், பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இன்றைக்கு மின்சாரம் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதை உற்பத்தி செய்ய வழக்கமான நிலக்கரி, நீர் உள்ளிட்டவற்றை நம்பி இருக்காமல் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

சூரியசக்தியை அதிக அளவில் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். சூரியசக்தியைப் பெறுவதற்காக விண்ணில் சூரியசக்தி செயற்கைக்கோளை அனுப்ப வேண்டும். இதேபோல், தோரியம் தனிமம் ஹீலியம் வாயுவில் இருந்தும் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். இவ்வாறு சிவதாணு பிள்ளை கூறினார்.

மாநாட்டில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குநர் எம். அசியா மரியம், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் வி.வி.ஷெனாய் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x