Published : 05 Dec 2019 12:22 PM
Last Updated : 05 Dec 2019 12:22 PM

காவிரிப் படுகையில் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகள் - வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் எத்தனை இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டப் போகின்றீர்கள் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விகள்:

காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோகார்பன் கிணறுகளத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்து இருக்கின்றது? அதற்காக, மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது?

அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?

அவ்வாறு தோண்டுகின்ற இடம், விளை நிலங்களா? அவ்வாறு இருந்தால், அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா?

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

அக்கேள்விகளுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள விளக்கம்:

"காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம், 37 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

15 கிணறுகள், விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பிரச்சினைகள் குறித்து, அதற்கு உரிய அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்" என அமைச்சரின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x