Published : 03 Dec 2019 12:09 PM
Last Updated : 03 Dec 2019 12:09 PM

மேட்டுப்பாளையம் விபத்து: 17 பேரின் குடும்பங்களுக்கு தெரியாமல் பிரேத பரிசோதனை; ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள், அவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்தாமல் திருட்டுத்தனமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேட்டுப்பாளையம் நடூரில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் 4 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (டிச.3) மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "அந்த சுவர் பழுதடைந்திருக்கிறது, அதனால் எந்நேரமும் விழுந்து ஆபத்து ஏற்படலாம் என நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அமைச்சரிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த 17 பேரின் உயிர் நிச்சயம் காப்பாற்றப்பட்டிருக்கும். அரசு, அதிகாரிகள், அமைச்சரின் அலட்சியத்தால், சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. 17 பேரின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழந்த இரங்கல்.

இறந்தவர்களின் உடல்களை, அவர்களது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமல் திருட்டுத்தனமாக பிரேத பரிசோதனை செய்திருப்பது வேதனையளிக்கிறது. தொடக்கத்தில், இறந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அப்போது, இப்பகுதி மக்கள் இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த நிதியுதவி போதாது. அதை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வீடுகளை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிற்சது. இந்த சம்பவத்திற்கு காரணமானவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x