Published : 02 Dec 2019 04:07 PM
Last Updated : 02 Dec 2019 04:07 PM

ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு: அவமதிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை

பதவி நீட்டிப்பு, அவதூறு வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவமதிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்புக்குத் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு வரும் நவம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், அந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூசண் தலைமையிலான அமர்வில் தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முறையிட்டார்.

அப்போது உச்ச நீதிமன்ற அமர்வு , “தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது குறித்தும், அந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 2-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் அமர்விடம் தெரிவியுங்கள்” என அறிவுறுத்தியது.

இதனையடுத்து தமிழக அரசுத் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி அன்று பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆவணங்களை உயர் அதிகாரியான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமர் சிங்கிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம்தான் தன்னை நியமித்தது. ஆகவே நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே விலகுவேன், ஆவணங்களை அளிப்பேன் என்று பொன்.மாணிக்கவேல் பதிலளித்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூசண் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்குத் தடை விதிக்க வேண்டும், பதவியை நீட்டிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி தரப்பிலும், பொன்.மாணிக்கவேல் தரப்பிலும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசுத் தரப்பில் முத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதத்தில் கூறியதாவது: “இந்த வழக்கில் தமிழக அரசுக்கு பொன்.மாணிக்கவேலின் சேவை எங்களுக்குப் போதும். அவரது பதவி நீட்டிப்புக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆகவே அவரை விடுவித்துக் கொள்ளலாம். அது தொடர்பாக தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேலைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட அதிகாரி என்றால், எந்த ஒரு ரிப்போர்ட்டையும் உயரதிகாரிகளுக்குக் கொடுக்காமல், தன் போக்கில் நடப்பவர். உயரதிகாரிகள் கேள்விகளுக்கு உரிய பதிலளிப்பது கிடையாது. உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்குத் தொடுப்பது என்பதாகத்தான் அவரது செயல் அமைந்துள்ளது.

தன்னுடைய உயரதிகாரிகளை மதிக்காத போக்குதான் பொன்.மாணிக்கவேலுவிடம் உள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் திறமையான அதிகாரிகள் பதவியில் உள்ளனர். ஆகவே தற்போதைய சூழ்நிலையில் பணி நீட்டிப்பு என்பது அதிமுக்கியமான சூழ்நிலையில் அதிகாரிகளின் தேவையைக் கருதி அளிப்போம். இந்த வழக்கில் இவர் விசாரணை நடத்தி முடித்துவிட்டார். ஆகவே அவரது பணியை நீட்டிக்க விரும்பவில்லை”.

இவ்வாறு முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி வாதத்தில், ''பொன்.மாணிக்கவேல் இந்த வழக்கைப் பொறுத்தவரை முழுமையாக விசாரணை நடத்தியுள்ளார். பல வழக்குகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பொன்.மணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த வழக்கில் விரிவாக விசாரணை நடத்தியுள்ளேன். இந்த வழக்கில் அரசியல்வாதிகள், செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளதால் மேலும் வழக்கை விசாரிக்கவேண்டியுள்ளது. என் தரப்புக்கு ஒத்துழைப்பு தரப்படுவதில்லை. ஆகவே இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதற்காக நீட்டிக்க வேண்டும்'' என்றார்.

தமிழக அரசுத் தரப்பில், ''எங்களுக்கு இவர் தேவை இல்லை. தேவையான அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆவணங்களை ஒப்படைக்கச் சொல்லுங்கள்'' என்று தெரிவிக்கப்பட்டது.

''எங்களுக்கு எவ்வித உத்தரவும் வராத நிலையில் நாங்கள் ஏன் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்'' என்று பொன்.மாணிக்கவேல் தரப்பு கேட்டது.

அப்போது இடைமறித்த நீதிபதிகள், ''ஒருவருடைய பதவிக் காலம் முடிவடைந்தவுடன் ஆவணங்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதி. ஒத்துழைக்க முடியாது, ஆவணங்களை வழங்க முடியாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும். ஆகவே, ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் உடனடியாக மேலதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதற்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

அதை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவமதிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழக அரசுத் தரப்பில் பொன்.மாணிக்கவேலுவின் பதவி நீட்டிப்பு விவகாரம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதற்கும் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்க முடியாது என்று சொன்ன நீதிபதிகள், அது சம்பந்தமான விசாரணை நடக்கும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x