Last Updated : 06 Aug, 2015 10:47 AM

 

Published : 06 Aug 2015 10:47 AM
Last Updated : 06 Aug 2015 10:47 AM

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் மூலிகை ஓவியங்களை புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது: ரூ.68 லட்சத்தில் மதிப்பீடு

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலின் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை, ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை தொல்லியல் துறையினர் வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வரதராஜபெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில், கி.பி. 848-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்கு, மூலவர் சன்னதியின் சுற்று சுவரில், பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தீட்டப்பட்ட வண்ண ஓவியங்கள் உள்ளன. பெருமாளின் தசாவதாரங்கள் மற்றும் பள்ளி கொண்ட பெருமாள், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை போன்ற திருமாலின் பெருமை களை விளக்கும் ஓவியங்கள் தீட் டப்பட்டுள்ளன. இவை 400 அல்லது 500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

முறையான பராமரிப்பு இல் லாததால், பாழ்பட்டு வரும் இந்த ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, வரதராஜ பெருமாள் கோயில் ஓவியங்களை புதுப்பிக்க அறநிலையத்துறை கடந்த ஜூன் மாதம் ரூ.68 லட்சம் ஒதுக்கியது.

பழமையான ஓவியம் என்பதால், தொல்லியல்துறை மூலமே ஓவியங்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுப்பிக்கும் பணிகளுக்காக கடந்த 2-ம் தேதி பூஜை நடைபெற்றது. வரும் 10-ம் தேதி தொல்லியல் துறையினர் புதுப்பிக்கும் பணியை தொடங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வரதராஜபெரு மாள் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:

‘‘மூலவர் சன்னதியின் வெளிப் பிரகார சுவற்றில் உள்ள ஓவியங்கள், காலப் போக்கில் அழுக்கு படிந்து மறைந்துள்ளன. சில இடங்களில் லேசாக சிதைந்துள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில், ரசாயன பூச்சுகளை கொண்டு, ஓவியங்களின் மீது படிந்துள்ள தூசுகள் அகற்றப்படும். இதனால், ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x