Published : 28 Nov 2019 01:57 PM
Last Updated : 28 Nov 2019 01:57 PM

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று (நவ.28) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30-ம் தேதி, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக தாம்பரத்தில் 15 செ.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 10 செ.மீ., கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் 8 செ.மீ., நாகை மாவட்டம் சீர்காழியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 24 மணிநேரத்திற்கு இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x