Published : 27 Nov 2019 11:09 AM
Last Updated : 27 Nov 2019 11:09 AM

தஞ்சையில் அரசு பெண் ஊழியர், நண்பருடன் வெட்டிக் கொலை: தப்பியோடிய சகோதரி மகனுக்கு போலீஸார் வலை

தஞ்சாவூரில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அரசு பெண் ஊழியர், அவரது நண்பருடன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் புதிய ஹவுசிங் யூனிட் இ பிளக்கில் வசித்து வந்தவர் வனிதா(36). இவரது கணவர் காமராஜ். இவர்களுக்கு அரவிந்த்(17), அரனேஷ்(15) ஆகிய மகன்கள், ஆர்த்தி(16) என்ற மகள் உள்ளனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த காமராஜ், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

கணவர் இறந்ததையடுத்து, வனிதாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத் துறையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருவையாறை அடுத்த திருவேதிக் குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுநராகப் பணியாற்றிய கனகராஜ்(34) என்ப வருடன் கூடா நட்பு ஏற்பட்டது. இதையடுத்து கனகராஜ், வனிதா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இதற்கிடையில், வனிதா தன் சகோதரியின் மகன் பிரகாஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில், ரூ.1.5 லட்சத்தை சில மாதங்களுக்கு முன் கொடுத்துவிட்டார். இன்னும் ரூ.50 ஆயிரத்தை தராமல் தாமதப்படுத்தி வந்துள்ளார். பலமுறை கேட்டும் தராததால் இதுகுறித்து பிரகாஷ் போலீஸில் புகார் செய்துள்ளார்.


வனிதா - கனகராஜ்

இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வனிதாவின் வீட்டுக்கு பிரகாஷ் தனது நண்பர் சூர்யா மற்றும் ஒருவருடன் சென்றுள்ளார். ரூ.50 ஆயிரத்தை திருப்பித் தருமாறு பிரகாஷ் கேட்டபோது, 3 குழந்தைகளும், கனகராஜூம் அங்கு இருந்துள்ளனர்.

அப்போது, இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வனிதா மற்றும் கனகராஜை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரவிந்த், அரனேஷ், ஆர்த்தி ஆகியோர் கதறி அழுததைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது வனிதாவும், கனகராஜூம் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவக் கல்லூரி போலீஸார் வனிதா, கனகராஜ் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பிரகாஷ் உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

மகள், மகன்களின் முன்பாக தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x