Published : 27 Nov 2019 07:12 AM
Last Updated : 27 Nov 2019 07:12 AM

சென்னை முதல் கன்னியாகுமரி வரை: கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை 

வடகிழக்கு காற்றின் சாதகமான போக்கு, வெப்பச் சலனம் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு காற்றின் சாதகமான போக்கு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சி , விழுப்புரம், கடலூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அப்பகுதியில் மீன்பிடிக்க மீன வர்கள் செல்ல வேண்டாம்.

செய்யாறில் அதிக மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாத புரம், ராமேஸ்வரம், மண்டபத்தில் 4 செ.மீ., தங்கச்சிமடத்தில் 3 செ.மீ., முத்துப்பேட்டை, பாம்பன், கடலாடியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த அக்.1-ம் தேதி முதல் நவ.26-ம் தேதி வரை கோவை, ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட் டங்களில் மட்டும் இயல்பைவிட அதிக அளவு மழை பதிவாகி யுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக இயல்பைவிட 64 சதவீதம் மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இயல்பான அள வுக்கு மழை பதிவாகியுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்தைவிட மழை குறைவாக பெய்துள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x