Published : 09 Aug 2015 10:11 AM
Last Updated : 09 Aug 2015 10:11 AM

சென்னையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி: கிலோ ரூ.7-க்கு விற்பனை

சென்னையில் தக்காளியின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஜூன் மாதம் ரூ.50-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை அதன் பிறகு குறையத் தொடங்கியது. ஜூலை மாதத்தில் ரூ.30 வரை குறைந்திருந்த தக்காளியின் விலை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேலும் குறைந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் தக்காளி வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தக்காளியின் வரத்து குறைவாக இருந்தது. தினசரி 40 லோடுகள் தக்காளி மட்டுமே வந்துகொண்டிருந்தது. அதனால் அப்போது தக்காளியின் விலை ரூ.50 வரை சென்றது.

தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் தினமும் 70 லோடுகள் வரை தக்காளி வந்துகொண்டிருக்கிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி வரும் அக்டோபர் வரை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாவின் ஒட்டுமொத்த தக்காளி உற்பத்தியில் 35 சதவீத உற்பத்தியுடன் ஆந்திர மாநிலம் முதலிடத்திலும், 10.44 சதவீத உற்பத்தியுடன் கர்நாடக மாநிலம் 2-ம் இடத்திலும், 3.45 சதவீத உற்பத்தியுடன் தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளன. தமிழகத்துக்கான தக்காளி ஆந்திரம், கர்நாடக மாநிலத்திலிருந்து அதிக அளவில் வருகிறது. தற்போது அங்கு உற்பத்தி அதிகரித்திருப்பதால், தமிழகத்துக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x