Published : 23 Nov 2019 08:52 AM
Last Updated : 23 Nov 2019 08:52 AM

கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாரிசுதாரர்கள் டிசம்பர் 5-ம் தேதிக்குள் பெயர் மாற்றம் செய்ய உத்தரவு

சென்னை 

கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாரிசுதாரர்கள் டிசம்பர் 5-ம் தேதிக்குள் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த இடங்களில் வாடகைதாரர்கள் தவிர கோயில் சொத்தினை அனுபவித்து வரும் வாரிசுதாரர்களோ அல்லது மூன்றாம் நபர்களோ நேரடி வாடகைதாரர்களாக பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.

பெயர் மாற்றம் செய்பவர்கள், கிராம நிர்வாக அலுவலர் சான்று, மொத்த நிலுவை தொகை செலுத்தியதற்கான ரசீது நகல், பெயர் மாற்றம் கோருபவர் இதற்கு முன்பு குற்றநிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவராகவோ, கோயிலுக்கு எதிராக வழக்காடுபவர்களாகவோ இருத்தல் கூடாது என்பதற்கான ஆதாரம்,வாரிசுதாரர் எனில் பிற வாரிசுதாரர்களின் ஆட்சேபனையில்லா கடிதம்,பெயர் மாற்றம் கோரும் இடத்துக்கான தள வரைப்படம் உள்ளிட்ட 13 ஆவணங்களுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டிசம்பர் 5-ம் தேதிக்குள் நிலுவை வாடகை தொகையினை செலுத்தி அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கான நேரடி வாடகைதாரராக பெயர் மாற்ற செய்ய கோருபவர் விண்ணப்பிக்க வேண்டும் என்று இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, நிலுவை வாடகை தொகையினை செலுத்தி விண்ணப்பிக்காதவர்கள் மீது சொத்து சுவாதீன நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x