Published : 30 Aug 2015 05:37 PM
Last Updated : 30 Aug 2015 05:37 PM
10 ஆண்டுகளாகப் போராடியும் தொடக்கப்பள்ளி அமைக்காததால் தொடக்கக் கல்விக்காக 3 கி.மீ. தூரம் காட்டுவழியே மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள தீத்தானிப்பட்டி ஊராட்சி முருங்கக்கொல்லை கிராமத்தில் சுமார் 750 பேர் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டுமென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்களின் ஆலோசனைப்படி ஊரார் சார்பில் பள்ளிக் கட்டிடமும் கட்டப்பட்டது. எனினும், பள்ளி தொடங்காததால் அதில் அங்கன்வாடி தொடங்கப்பட்டது. பின்னர், அரசு கட்டிடத்துக்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளியைத் தொடங்க வேண்டுமென முதல்வர், சட்டப்பேரவை மனுக்கள் குழு (4 முறை), கல்வித் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பலமுறை சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2009-ல் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், விரைவில் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்துள்ளார்.
அப்போதிலிருந்து தமிழக அரசு சார்பில் புதிதாக தொடக்கப்பள்ளி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடும்போதெல்லாம் முருங்கக்கொல்லை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாற்றம் அடைவதும் தொடர்கிறது.
ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் விதி ஏனோ இந்தக் கிராமத்துக்குப் பொருந்தவில்லை. இதனால் இந்தக் கிராமத்தில் இருந்து 24 மாணவிகள் உட்பட 63 பேர் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேட்டுப்பட்டி, வாழைக்கொல்லை, தீத்தானிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயில்கின்றனர்.
இப்பள்ளிகளுக்குச் செல்வதற்கு குறிப்பிட்ட தூரத்துக்கு பிரதான சாலை வசதி இல்லாததால் தைலமரக்காடு, குளத்துப்பகுதி வழியே நடந்தே செல்கின்றனர்.
காலில் செருப்புகூட இல்லாமல் காட்டுவழியே நடந்து செல்லும்போது வயல் வரப்புகளில் இடறிவிழுந்தும், முட்கள் குத்தியும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். வாழைக்கொல்லை பள்ளி செல்லும் வழியில் வரப்போரத்தில் திறந்த நிலையில் இரண்டு கிணறுகள் உள்ளன. மழைக் காலங்களில் பெரும்பாலும் மாணவர்கள் பள்ளி செல்வதில்லை.
இந்தக் கிராமத்தில் பெற்றோர் முற்றிலும் விவசாயக் கூலி வேலை செய்துவருவதால் யாரும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை.
இதுகுறித்து தமிழக அரசு, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் முருங்கக்கொல்லையில் தொடக்கப்பள்ளி அமைக்கப்படு மென்ற அறிவிப்பை வெளியிட வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் கூறும்போது, “கடந்த 2015 ஜனவரி 12-ம் தேதி மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, அடுத்துவரும் அறிவிப்பில் இங்கு தொடக்கப்பள்ளி அமைக்கப்படுமென மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உறுதி அளித்துள்ளார். மேலும், புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தொண்டைமானும் கடும்முயற்சி செய்து வருவதால் இந்தக் கல்வியாண்டில் இங்கு பள்ளி அமைக்கப்படலாமென எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, “முருங்கக்கொல்லையில் பள்ளி அமைக்க தேவையான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT