Published : 15 Nov 2019 02:39 PM
Last Updated : 15 Nov 2019 02:39 PM
சென்னை
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் மாணவர்களுக்காக திமுக சார்பில் அனிதா பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.15) நடைபெற்றது.
அதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், பயிற்சி பெற்ற 128 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் தமிழக அரசுதான் கவனம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக, அதிமுக கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், "இது முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை திட்டமிட்டு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் பொய். உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில்தான் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அதனால்தான், எஸ்.சி/எஸ்.டி இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்து நாடகத்தை நடத்தினர். இட ஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் திமுக வழக்குத் தொடுத்தது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT