Published : 09 Nov 2019 01:52 PM
Last Updated : 09 Nov 2019 01:52 PM

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்று ஒற்றுமையாக இருப்போம்: அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கருத்து

ராமநாதபுரம்

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருப்போம் என அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கில், ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அளித்த பேட்டியில், "அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. எல்லா மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சாதகமா, பாதகமா என்பது விஷயமல்ல. நீண்டநாள் பிரச்சினை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. சட்டம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் இத்தனை காலம் ஆகியிருக்கிறது. இப்போது வந்துள்ள தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு; நமது மார்க்கம் நமக்கு என்பதுதான் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல். அந்த வழியில் நடப்போம். அன்பு, அறம், ஒழுக்கம், நீதி, பண்பாடு ஆகியன நிலைத்திருக்க, மனித சமுதாயம் ஒற்றுமையாக இருக்க இந்தத் தீர்ப்பு முழுமையானதாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x