Published : 07 Nov 2019 09:43 AM
Last Updated : 07 Nov 2019 09:43 AM

கூட்டணி, இடஒதுக்கீட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தல்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

சென்னை

‘கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்குங்கள்’ என்று அதிமுகநிர்வாகிகளுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவெற்றி பெற்றது. அதே நேரத்தில்மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்துநடந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தது. அதன்பின் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த அதிமுகவினருக்கு அண்மையில் நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம், அதிமுகவில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

இடைத்தேர்தல் வெற்றியால் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகத்தையும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையும் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அதிமுக ஒருங்கிணைப் பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. தற்போதைய நிலையில் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு பதிலாக சிறிது காலம் கழித்து சந்திக்கலாம் எனகூட்டத்தில் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதே நல்லது என்று கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘இடைத்தேர்தல் வெற்றி. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அனைவரும் உழைக்க வேண்டும்’’ என்றார்.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும்போது, ‘இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்றியதாலும், முறையாகதேர்தல் பணியை மேற்கொண்டதாலும் அந்த இரு தொகுதிகளையும் நாம் கைப்பற்றியுள்ளோம்.

இதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றினால் நாம் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் மத்தியில் அரசின் திட்டங்களையும், நமது பணிகளையும் எடுத்துச் சொன்னாலே போதும். உள்ளாட்சித் தேர்தலில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். கூட்டணி, இடங்கள் பங்கீடு உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி வெற்றிக்கு பாடுபட வேண்டும்’’ என்றார்.

வெற்றி தொடரும்ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். நிர்வாகிகள் அனைவரும் முகமலர்ச்சியோடும், உற்சாகத்துடனும், நம்பிக்கையோடும் இருக்கின்றனர். தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தைரியமாகவும், தயாராகவும் இருக்கிறோம். திமுகதான் அச்சத்துடன் உள்ளது. அதனால்தான் மு.க.ஸ்டாலின் தினமும் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். இவ்வாறு அமைச்சர் ஜெயக் குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x