Published : 06 Nov 2019 10:32 AM
Last Updated : 06 Nov 2019 10:32 AM

தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கு புதிதாக 5 ஆயிரம் பேர் ஒரு மாதத்தில் நியமனம்: மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

கோவில்பட்டி

தமிழக மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு புதிதாக 5,000 பேர் இன்னும் ஒரு மாத காலத்தில் நியமிக்கப்படுவார்கள் என கோவில்பட்டியில் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் தென்னம்பட்டி பகுதியில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110/230 கிலோ வாட் துணை மின் நிலையத்தை மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று திறந்து வைத்து, சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 450 துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 120துணை மின் நிலையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துணை மின்நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வுசெய்யபொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் இன்னும் விரைவாக பணிகள் நடைபெறும் மின்வழித்தடங்களை புதை வழித்தடங்களாக கொண்டு செல்ல வளர்ந்தநாடுகளில் கூட இன்னும் தொழில்நுட்ப வசதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார். விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் 2015-ம் ஆண்டு ஜூன் முதல் மின் வெட்டு இல்லாத மாநிலமாக மட்டுமின்றி மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் காற்றாலை மூலம் 8,500 மெகாவாட், சூரிய ஒளி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய ஒளி மின் உற்பத்தியை விரைவில் 6,000 மெகா வட்டாக உயர்த்த உள்ளோம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 6 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தொடர்ந்து கோவில்பட்டியில் அமைச்சர் கூறும்போது, “மின்வாரியத்தில் புதிதாக கேங்மேன் பணிக்கு 5,000 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு ஏற்கெனவே மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் செய்முறைதேர்வு நடத்தப்படும். மின் கம்பம் நடுவது, கம்பத்தில் ஏறுவது, இழுத்து கட்டுவது போன்ற பணிகளை தேர்வர்கள் செய்து காட்ட வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும். இந்த பணிகளை ஒரு மாத காலத்தில் முடிக்க உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x