Published : 30 Oct 2019 08:41 AM
Last Updated : 30 Oct 2019 08:41 AM

காலவரையற்ற வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு; தீவிர சிகிச்சை பணியையும் புறக்கணிப்போம்; தமிழக அரசுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை

அரசு டாக்டர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தங்களை அச்சுறுத்துவது, கைது செய்வது போன்ற நடவடிக்கை களில் ஈடுபட்டால், அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு பணிகளையும் புறக்கணிப் போம் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும், காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கினர். 5-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

இவர்களுக்கு ஆதரவாக பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

நோயாளிகள் நலன் கருதி..

டெங்கு பாதிப்பு அதிகமாக இருப் பதாலும் காய்ச்சல் பிரிவுகளிலும் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் நோயாளிகளின் நலன்கருதி கையெழுத் துப் போடாமல் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மற்ற பிரிவுகளில் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுதவிர சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி தொடர் உண்ணாவிரதத் தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் சுரேஷ் கோபால், ரமா மற்றும் பாலமணிகண் டன் ஆகியோரின் உடல்நிலை மோசமான தைத் தொடர்ந்து, அவர்கள் தீவிர சிகிச் சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தவிர தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் பெருமாள் பிள்ளை, நீர் முகிப் அலி ஆகியோருடன் நேற்று டாக்டர்கள் நளினி மற்றும் பாண்டிதுரை ஆகியோரும் இணைந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் டாக்டர்களை சந் தித்து ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

இந்நிலையில், அனைத்து அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் பந்தல் போட யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. அப்படி யாராவது பந்தல் போட்டிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக கூடியிருப்பவர்கள் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். பணிக்குச் செல்லும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக டாக்டர்களிடம் கேட்ட போது, “கோரிக்கைகளை நிறைவேற்று வதாகக் கூறி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏமாற்றிவிட்டார். இந்த விஷயத்தில் முதல் வர் தலையிட வேண்டும். அதுவரை வேலைநிறுத்தம் தொடரும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் எங்களை அச்சுறுத்துவது, கைது செய்வது போன்றவைகள் நடந்தால் தமிழகம் முழுவதும் காய்ச்சல், அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பணிகளையும் முழுமை யாக புறக்கணிப்போம் என்றனர். இதற் கிடையே, அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றும் போராட்டத்தை டாக் டர்கள் கைவிட வேண்டும் என்றும் சுகா தாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x