Published : 22 Oct 2019 04:29 PM
Last Updated : 22 Oct 2019 04:29 PM

‘பிகில்’ படம் வெளியாவதில் சிக்கல் தீர்ந்தது: வழக்கு தொடர உதவி இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை

‘பிகில்’ படக்கதை தொடர்பாக காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் புதிதாக வழக்கு தொடர உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படம் வெளியாவதில் இருந்த பிரச்சினை தீர்ந்தது.

நடிகர் விஜய் நடித்து, அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம், அக்டோபர 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படத்தின் கதை தன்னுடைய என்றும் படத்துக்குத் தடை விதிக்க கோரியும் உதவி இயக்குநர் கே.பி.செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரியும் செல்வா தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.

புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து கே.பி.செல்வா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, காப்புரிமைச் சட்டப்படி மனுதாரர் தாக்கல் செய்யும் வழக்கை சட்டப்படி விசாரித்து தகுந்த உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கவும் உத்தரவிட்டார்.

இதன் மூலம் ‘பிகில்’ படம் வெளியாவதில் உள்ள பிரச்சினை, படத்துக்குத் தடை போன்ற சர்ச்சை நீங்கியதால் அறிவித்தபடி அக்டோபர் 25-ம் தேதி அன்று படம் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x