Published : 22 Oct 2019 09:21 AM
Last Updated : 22 Oct 2019 09:21 AM
ஈரோடு
ஈரோட்டில் திரையரங்கில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை ஆய்வில் கண்டறிந்த ஆட்சியர் சி.கதிரவன் ரூ.2 லட்சம் அபராதம் விதித்ததுடன், திரையரங்கிற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், நாள்தோறும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உணவகங்கள், கடைகள், நிறுவனங்கள், வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள், சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சில பிரச்சினைகளால் இந்த திரையரங்கு சில மாதங்களாக இயங்காமல் இருந்து வருகிறது. திரையரங்கில் தேங்கியுள்ள தண்ணீரில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவினை உற்பத்தி செய்யக்கூடிய புழுக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ரூ.2 லட்சம் அபராதம் விதித்த ஆட்சியர், திரையரங்கிற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், திரையரங்கிற்கு உடனடியாக குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், அசோகபுரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தமிழரசு என்பவரது வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழுக்கள் இருந்தது தெரிய வந்ததையடுத்து, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT