Published : 19 Oct 2019 08:07 PM
Last Updated : 19 Oct 2019 08:07 PM

ஆவிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்: கே.எஸ். அழகிரி

நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல, என்று இங்கு நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் மேற்கொண்ட தீவிர பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நாங்குநேரி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையானது என்றும் திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்றும் கூறினார்.

மேலும் “ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது. தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வரும் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது” என்றார்.

இதற்கு பதில் அளிக்குமாறு நாங்குநேரியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ““ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல, ஆவிகளை விரட்டி அடிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x