Published : 18 Oct 2019 03:00 PM
Last Updated : 18 Oct 2019 03:00 PM

7 தமிழர்களை விடுவிக்க ஆளுநர் மறுப்பா? அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரபூர்வமாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.18) வெளியிட்ட அறிக்கையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரபூர்வமற்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து விட்டதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆளுநரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உண்டு என்றும், இந்த விஷயத்தில் அமைச்சரவை பரிந்துரையின்படி ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி ஆணையிட்டது. அதனடிப்படையில் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அதன்பின் சில முறை அரசின் சார்பில் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் இருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று முதல்வரிடம் ஆளுநர் கூறிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆளுநரும், முதல்வரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.

7 தமிழர்கள் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பதற்கும், திருப்பி அனுப்பவும் ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆனால், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முதல்வரிடம் ஆளுநர் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்துவிட்டார் என்றால், தமது அந்த முடிவை அதிகாரபூர்வமான முறையிலும் தமிழக அரசுக்கு தெரிவித்திருக்க வேண்டும். அது அரசியல் சட்டப்படியான அவரது கடமையாகும்.

மாறாக, ஒருபுறம் முதல்வரிடம் தமது முடிவைத் தெரிவித்துவிட்டு, மறுபுறம் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதங்களுக்கு, "அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் உள்ளது" என ஆளுநர் மாளிகையிலிருந்து பதில் அனுப்புவது முறையல்ல. ஒரே விஷயத்தில் அதிகாரபூர்வமாக ஒரு நிலைப்பாட்டையும், அதிகாரபூர்வமற்ற முறையில் இன்னொரு நிலைப்பாட்டையும் ஆளுநர் மேற்கொள்வது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற தமது முடிவை ஆளுநர் எழுத்து மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கும் பட்சத்தில், தமிழக அமைச்சரவை மீண்டும் கூடி ஏழு தமிழர்களை விடுவிக்கப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பினால் அதை ஏற்று 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆணையிடுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்படும்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவே ஆளுநர் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டுமே தவிர, சொந்த விருப்பு வெறுப்பின்படி செயல்பட முடியாது.

7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு எழுதிய கடிதங்களை நிராகரித்த மத்திய உள்துறை அமைச்சகம், "7 தமிழர்களை விடுவிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும்; சர்வதேச அளவில் பல விளைவுகளை ஏற்படுத்தும்" என்று கூறியிருந்தது. அதனடிப்படையில் தமிழக ஆளுநர் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியதாகவும் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுவும் அபத்தமான வாதமாகும்.

மத்திய உள்துறை அமைச்சகம் இதே வாதத்தை உச்ச நீதிமன்றத்திலும் பதில் மனுவாகத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த வாதத்தை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி கோகாய் தலைமையிலான அமர்வு ஏற்கவில்லை. அதனால் தான் 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

7 தமிழர்களை விடுதலை செய்வதால் ஏற்படும் அனைத்து விளைவுகளையும் ஆராய்ந்த பிறகு தான் அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. அதுமட்டுமின்றி, 7 தமிழர்கள் விடுதலை என்பது சலுகை இல்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விட இரு மடங்கு சிறை தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில் தான் அவர்களின் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது இதுபோன்ற நிராகரிக்கப்பட்ட காரணங்களைக் கூறி, 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களின் விடுதலையை ஆளுநர் மாளிகை தாமதிப்பது மனிதநேயமற்ற செயலாகவே அமையும்.

7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை அதிகாரபூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே பரிந்துரையை ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x