Last Updated : 16 Oct, 2019 03:34 PM

 

Published : 16 Oct 2019 03:34 PM
Last Updated : 16 Oct 2019 03:34 PM

வைகையில் மணல் கொள்ளை உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கவும்: திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட வைகை ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சர்க்கரை கரும்பு விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கத்தில் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆற்றுப்படுகைகளில் குறிப்பாக வைகை ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் குடிநீருக்காக அல்லாடும் நிலை உருவானது.

இதன் காரணமாக நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தபோது, அதிகாரிகள் தரப்பில் செக்போஸ்ட் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுவர் என உறுதியளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தேனியில் உற்பத்தியாகி திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் வைகை ஆற்றுப் படுகைகளில் அதிகளவில் மீண்டும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 50க்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றிலிருந்து தப்புவதற்காக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுகிறது.

அவர்களும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மீண்டும் மனு அளித்த நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மிரட்டி வருகின்றனர்.

வைகை ஆற்றுப் படுகையில் நடைபெறும் மணல் கொள்ளையால், விவசாயிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். ஆகவே, திண்டுக்கல் மாவட்ட வைகை ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ள தடை விதிப்பதோடு, மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, திண்டுக்கல் மாவட்ட வைகை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x