Published : 16 Oct 2019 02:36 PM
Last Updated : 16 Oct 2019 02:36 PM

அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழா: பொன்விழா ஆண்டிலும் ஆட்சியில் இருக்கப் பணியாற்றுவோம்; தொண்டர்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

அதிமுகவின் பொன் விழா ஆண்டான 2022-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்க பணியாற்ற வேண்டும் என, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிமுக தொடங்கப்பட்டு 48-வது ஆண்டு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (அக்.16) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"தமிழ் மண்ணுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட எம்ஜிஆர், மக்கள் நலனுக்காக அதிமுகவைத் தொடங்கிய நாள் அக்டோபர் 17. தொண்டர்களின் ரத்த நாளங்களில் கலந்துவிட்ட இயக்கம், 48-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அண்ணா மறைவுக்குப் பிறகு, நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில்தான் கருணாநிதியை முதல்வராக்கினார் எம்ஜிஆர். அதற்கு மாறாக கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தினார். ஊழல் ஆட்சி நடத்தினார். அவரை முதல்வராக்கிய எம்ஜிஆரையே கட்சியை விட்டு நீக்கினார். கருணாநிதி செய்த சதி, திமுகவுக்குப் போதாத காலமாக ஆனது. தமிழக மக்களுக்குப் பொற்காலம் ஆனது. அதிமுக தோன்றியது.

தீய சக்தியின் ஆட்சியை வீழ்த்தி, தெய்வ சக்தியின் ஆட்சி மலர்ந்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் எழுச்சி அடங்கிவிடும், தொண்டர்கள் ஒடுங்கிவிடுவார்கள் என்று தீயசக்தி துள்ளிக் குதித்தது. ஆனால், ஜெயலலிதாவின் வீரத்தால், விவேகத்தால் அந்த தீயசக்தி திமுகவுக்கு மரண அடி கிடைத்தது.

அரசியல் விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ, சமூக மறுமலர்ச்சியும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஏற்படுதல் அவசியம் என்ற விழிப்புணர்வை உலகம் பெறத் தொடங்கியதும் கடந்த நூற்றாண்டில்தான். அந்த விழிப்புணர்வை, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்படுத்திட உழைத்த எண்ணற்றோரின் பாதையில், பெரியார் உருவாக்கிய சிந்தனைகளின் அரசியல் வடிவமாக புதிய இயக்கம் கண்டார் அண்ணா. அவர் வெளிப்படுத்திய தமிழ்ச் சிந்தனை, திராவிட அரசியலாகவும், தமிழ் பண்பாட்டின் அரணாகவும், அரசியலாகவும் வேரூன்றியது.

சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் சாதி, மத, இன பாகுபாடு இல்லாமல்; ஆண், பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் சம வாய்ப்பு பெற்று மகிழ்ச்சியுடனும், தலை நிமிர்ந்தும் வாழ அண்ணா வழியில் 47 ஆண்டுகளுக்கு முன் உருவானதுதான் அதிமுக.

திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும், ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகம் படைக்கும் லட்சியத்தையும், பெண் விடுதலையும், சுயமரியாதையும் நிலைநாட்டப்படுவதையும் கொள்கைகளாகக் கொண்டு எம்ஜிஆர் இந்த இயக்கத்தை வளர்த்தார். ஆட்சிப் பொறுப்பு தனது கரங்களில் வந்தவுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழை, எளிய மக்களின் உயர்வுக்கும் பெண்கள் சம உரிமை பெறுவதற்கும் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தினார்.

அரசியல் ரீதியாக எத்தனை, எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டு அல்லலுற்றபோதும், பொருளாதார நெருக்கடிகள் நேர்ந்தபோதும் துணிவுடன் அவற்றையெல்லாம் அஞ்சாமல் எதிர்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்று மெல்ல மெல்ல அனைவரும், எதிர்த்தோரும் கூட ஏற்றுப் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக இயக்கத்தையும், ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி தேசிய சராசரியைவிட பல புள்ளிகள் உயர்ந்து 8 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இது விரைவில் 9 சதவீதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக தமிழ்நாடு மாறியுள்ளது.

சீன அதிபரும், பிரதமரும் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பு தமிழகத்தின் நிர்வாகத் திறமையை உலகுக்குப் பறைசாற்றியுள்ளது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நலத்திட்டப் பணிகள் பலவற்றை அயராது நிறைவேற்றி வருகிறோம். இன்னும் ஏராளமான பணிகளைச் செய்து மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்ய வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் பணிகள் தொடர்கின்றன.

இந்த தருணத்தில் அதிமுகவின் அரசியல் பணிகளை நினைவில் கொள்வோம். இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைத்திடுவோம்; விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நிலைகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்ற பணிகளை உடனடியாகத் தொடங்குவோம்.

ஒற்றுமையுடன் அரசியல், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்போம். இயக்கத்தின் லட்சியங்களை மனதிற்கொண்டு அறிவிக்கப்படும் மக்கள் நலத்திட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்வோம். அனைத்திற்கும் மேலாக எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்ததைப் போல, அதிமுகவின் 50 ஆவது ஆண்டு, பொன்விழா ஆண்டான 2022-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்து எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் புகழ் மேல் புகழ் சேர்த்திட, இப்போதே பணிகளைத் தொடங்குவோம்.

அதிமுக பணிகளில் தோளோடு, தோள் நின்று அனைத்து வகையிலும் உழைத்து வரும் தொண்டர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாத வண்ணம் அவர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக என்றென்றும் திகழும் என்ற உறுதி மொழியை அளிக்கிறோம்".

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x