Published : 15 Oct 2019 08:03 AM
Last Updated : 15 Oct 2019 08:03 AM

நீதிபதியை ட்விட்டரில் விமர்சனம் செய்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி பெயர் நீக்கம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியை ட்விட்டரில் விமர்சனம் செய்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியின் பெயரை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாக்‍காவுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் தொடர்ந்த வழக்கை நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. பின்னர், அதே வழக்‍கில் வீட்டுக்‍காவலில் வைக்‍கப்பட்டிருந்த நவ்லாக்‍காவை நீதிபதி முரளிதர் அமர்வு விடுவித்தது.

இதுதொடர்பாக தேஷ் கபூர் என்பவர் நீதிபதி முரளிதரை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த ட்விட்டரை துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி ரீ-ட்விட் செய்திருந்தார். அதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் ஆடிட்
டர் எஸ்.குருமூர்த்தி மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைதொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, இந்த வழக்கில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதால் அவர் எந்த மன்னிப்பும் கோரமாட்டார். இந்த வழக்கில் தேஷ் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார்.

எனவே தேஷ் கபூரின் மன்னிப்பை, ஆடிட்டர் குருமூர்த்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்விட் செய்வார் என தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தியின் பெயரை நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

குருமூர்த்தி விளக்கம்

இதுதொடர்பாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘நான் எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட
வில்லை. எந்த மன்னிப்பும் கோரவில்லை. கடந்த ஆக,6 அன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நான் வேறு ஒருவரின் ட்விட்டர் பக்கத்தைத்தான் ரீ-ட்விட் செய்தேன் என எனது சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேஷ் கபூர் பகிரங்க மன்னிப்பு கோரிவிட்டதால் அதையே ரீ-ட்விட் செய்ய வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் என் மீது எந்த நீதிமன்ற அவமதிப்பும் எழவில்லை. நான் எந்த மன்னிப்பும் கோரவில்லை’’ என அவர் அதில் விளக்கம் அளித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x