Published : 13 Oct 2019 06:41 PM
Last Updated : 13 Oct 2019 06:41 PM

ஆளுநர் வருகைக்கு அமைச்சர் எதிர்ப்பு- திட்டமிட்டப்படி ஏனாம் பயணம் என கிரண்பேடி உறுதி

புதுச்சேரி

ஏனாமுக்கு கிரண்பேடி வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ள சூழலில் திட்டமிட்டப்படி நாளை ஏனாம் பயணம் செய்ய உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழகத்தை ஒட்டியும், மாஹே கேரளத்தருகிலும், ஏனாம் ஆந்திரத்தின் அருகேயும் அமைந்துள்ளது. ஏனாமின் எம்எல்ஏவாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு நாளை அரசு முறை பயணமாக கிரண்பேடி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஆளுநர் கிரண்பேடி ஏனாம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், "கடந்த 2017ல் ஏனாம் வந்தபோது கொடுத்த கோரிக்கைகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அவர் வருவதை ஏற்கமாட்டோம். எனக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என அதிகாரிகளை கிரண்பேடி மிரட்டுகிறார். சிபிஐ வழக்கு பதியவும் முயற்சிக்கிறார்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் கிரண்பேடி தடையாக இருக்கிறார். ஆளுநர் கிரண்பேடி ஏனாம் வந்தால் தகுந்த பாடம் மக்கள் கற்பிப்பார்கள். மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்" என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வருகைக்கு அமைச்சரே எதிர்ப்பு தெரிவித்த சூழலில், திட்டமிட்டப்படி நாளை ஏனாம் செல்ல உள்ளதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
அவர் வாட்ஸ்அப்பில் கூறுகையில், "ஆளுநர் மாளிகையிலுள்ள குழுவுடன் நாளை ஏனாம் செல்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் எதிர்ப்பு ஒருபுறமும், ஆளுநர் ஆய்வு மறுபுறமும் உள்ளதால் ஏனாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பி ரட்சனா சிங் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

-செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x