Published : 12 Oct 2019 11:09 AM
Last Updated : 12 Oct 2019 11:09 AM

விமர்சிப்பவர்கள் பிரதமரின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள்: எஸ்.வி.சேகர்

விமர்சிப்பவர்கள் பிரதமரின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு கோவாளத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் காலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியுள்ள மோடி இன்று (அக்டோபர் 12) காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரையிலிருந்த குப்பைகளைச் சுத்தம் செய்தார்.

பிரதமர் மோடி கடற்கரையைச் சுத்தம் செய்த வீடியோ, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்தது மட்டுமன்றி, கையில் எவ்வித உறையும் போடாமல் இதைச் செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியின் செயலுக்கு பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி சமூக வலைதளத்தில் உள்ளவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ பதிவைக் குறிப்பிட்டு பாஜக கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் "மாமல்லபுரம் கடற்கரையில் குப்பை அள்ளி தூய்மையாக்கும் நம் பிரதமர்.

ஒரு கவுன்சிலர் கூட தன் கவுரவம் குறைந்துவிடும் எனச் செய்ய யோசிக்கும் இச்செயலை உணர்வுபூர்வமாக செய்யும் நம் இந்தியப் பிரதமரின் கால் தூசி கூடப் பெறமாட்டார்கள் அவரை விமர்சிக்கும் நெட்டிசன்கள். மோடி ஜி நீங்கள் பிரதமராக இருப்பதற்கு ஒவ்வொரு உண்மையான இந்தியரும் பெருமைப்படுவர்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x