Published : 12 Oct 2019 09:12 AM
Last Updated : 12 Oct 2019 09:12 AM
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தில் வெறிநாய்கள் கடித்ததில், 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி சேதுபதியின் (38) மகன் சந்தோஷ் (8). அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ், பள்ளியில் இருந்து மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வருவார். அதன்பிறகு வெளியில் விளையாடச் சென்றுவிட்டு, இரவு 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த சந்தோஷ், விளையாட வெளியே சென்றுள்ளான். ஆனால், இரவில் வீட்டுக்கு அவன் திரும்பி வரவில்லை. பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜ் என்பவரின் தோட்டத்தின் அருகே சந்தோஷ் இறந்து கிடந்தான். வெறிநாய்கள் அவனை கடித்து குதறியிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத் தியது.இக்கிராமத்தில் நேற்றும் பெண் ஒருவரை வெறிநாய் கடித்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே விடுவதற்கு அச்சப்படுகிறார்கள். இங்கு சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT