Last Updated : 11 Oct, 2019 11:20 AM

 

Published : 11 Oct 2019 11:20 AM
Last Updated : 11 Oct 2019 11:20 AM

ஆளும்கட்சியினர் மீது மக்களுக்குக் கோபம்; திமுக மீது பாசம்: கே.என்.நேரு பேட்டி

விழுப்புரம்

பயணிகளுக்குத் தரமான சாலையோர உணவகங்களை தமிழக அரசு அமைக்க முன்வர வேண்டும் என, முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இன்று (அக்.11) விழுப்புரம் வந்திருந்தார்.

அப்போது, கே.என்.நேரு 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"திமுக ஆட்சியில் 75 பேருந்துகளுடன் தொடங்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகம் படிப்படியாக வளர்ந்து இந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. போக்குவரத்துத் துறையை சேவை எண்ணத்தோடு தான் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புறத்து மக்களுக்குக் கிடைக்கும் போக்குவரத்து கிராமப்புற மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டன. பயணிகள் அடர்வு குறைவாக உள்ள கிராமங்களில் அரசுப் பேருந்துகள் சேவை மனப்பான்மையோடு இயக்கப்பட்டன. நஷ்டம் ஏற்பட்டாலும் அரசு, போக்குவரத்துக் கழகங்களை மக்களுக்காக நடத்தவேண்டும்.

தற்போது வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத் திட்டத்தை தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பேருந்துகள் பாடிகட்டும் பணிமனை அரசிடம் இருந்தாலும், வேகமாக அவர்களால் அரசின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. எனவே அரசே தனியாரிடம் பேருந்து பாடிகட்ட அனுப்பப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள ஒன்று. அதே போன்றுதான் வருடாந்திர பாரமரிப்பு ஒப்பந்தத் திட்டமும். இதனை அரசு தொழிலாளர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இந்தத் திட்டம் மூலம் பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும்.

கடந்த திமுக ஆட்சியில் 100 கிலோ மீட்டருக்கு ஒரு பயண வழி உணவகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை முதல் குமரி வரை பல்லாயிரக்கணக்கான சாலையோர உணவகங்கள் உள்ளன. எங்கு போக்குவரத்துக் கழக ஊழியர்களை நன்கு கவனிக்கிறார்களோ அங்கு பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. பயணிகள் நலனில் அக்கறை கொள்வதில்லை. பயணிகளுக்குத் தரமான, விலை குறைவாக உணவுகள் அளிப்பதில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்.

விக்கிரவாண்டி தொகுதியில் குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளைப் பார்க்க முடிகிறது. இதனால் ஆளுங்கட்சியினர் மீது மக்கள் கோபத்துடன் உள்ளனர். திமுக மீது மக்கள் பாசத்துடன் உள்ளனர். எங்களைப் போன்றவர்கள் செய்யும் தவறுகளால் மக்கள் மனம் மாறவும் வாய்ப்புண்டு. நிச்சயமாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றிபெறுவார்’’.

இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x