Published : 10 Oct 2019 07:08 PM
Last Updated : 10 Oct 2019 07:08 PM
சென்னை,
மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட அபூர்வ வகை மலைப்பாம்புகள், உடும்புகளை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோலாலம்பூரிலிருந்து காட்டு விலங்குகள் சென்னைக்குக் கடத்தப்படுவதாக உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்கத்துறையின் விமானப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கடத்தல்காரர்களை கைது செய்ய சிறப்பு எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டனர்.
அவ்வகையில் மலேசியா விமானம் சென்னை வந்தவுடன் மிகவும் தீவிரமான பரிசோதனைகள் நடைபெற்றது. பரிசோதனையின்போது ஒரு பையில் உயிரினங்கள் நெளிவதை சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட உயிரினங்களில் பச்சை மர மலைப்பாம்பு 1, குறுங்காட்டு பச்சை மலைப்பாம்பு 1, மரத்தில் ஊறும் கறுப்பு உடும்புகள் 2, மரத்தில் ஊறும் ட்ரீ மானிட்டர் உடும்புகள் 5, நீல நிற புள்ளிகள் கொண்ட உடும்புகள் 2, ரைசிங்கர் மரவகை உடும்பு 1 மற்றும் பாய்மர உடும்புகள் 4 ஆகியவை அடங்கும்.
கோலாம்பூரிலிருந்து விமானத்தின்மூலம் அபூர்வவகை உயிரினங்களை கடத்திவந்த முகமது பர்வாஸ் (36), முகமது அக்பர் (28) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, கைது செய்யப்பட்ட நபர்கள் இந்த பைகளை கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வெளியே யாரோ ஒருவர் இவர்களிடம் கொடுத்ததாகவும் சென்னை விமான நிலையத்திற்கு வெளியே ஒருவரிடம் ஒப்படைப்பதற்கான அறிவுறுத்தல்களுடன் வழங்கியதாகவும் தெரிவித்தனர். அவர்களாக இவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றும் அவர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கவர்ச்சியான இந்த ஊர்வன வகை உயிரினங்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்படும். மேலதிக விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT