Last Updated : 10 Oct, 2019 04:08 PM

 

Published : 10 Oct 2019 04:08 PM
Last Updated : 10 Oct 2019 04:08 PM

நெல்லையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரி வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வளாகம்: கோப்புப்படம்

மதுரை

நெல்லையில் அக். 13-ம் தேதி நடைபெறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனு மீது இன்று மாலைக்குள் போலீஸார் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.பாலாஜி கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லையில் ஆர்எஸ்எஸ் சார்பிபில் அக்.13-ம் தேதி டிவிஎஸ் நகரில் இருந்து இ.பி.காலனி வரை விஜயதசமி வெற்றி விழா மற்றும் 95-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தொடக்க விழா அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

இதற்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெருமாள்புரம் காவல் ஆணையர் மற்றும் பாளைங்கோட்டை ஏடிஎஸ்பியிடம் நெல்லை மாவட்ட ஆர்எஸ்எஸ் செயலர் டிகே.லோகசந்தர் மனு அளித்தார். இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் பிற கட்சிகள் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தலை காரணம் காட்டி அனுமதி வழங்க மறுக்கின்றனர். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள இடம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியல்ல.
எனவே அக். 13-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,"

இவ்வாறு மனுவி்ல் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (அக்.10) விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் மனுவை பரிசீலித்து இன்று மாலைக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x