Published : 09 Oct 2019 07:38 AM
Last Updated : 09 Oct 2019 07:38 AM

வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்கும்; 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

வெப்பச் சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:

வெப்பச் சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 9-ம் தேதி (இன்று) கனமழை பெய்யும். பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 27 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

தென்மேற்கு பருவமழை இன்னும் முடியவில்லை. ஆங் காங்கே மழை பெய்து வருகிறது. சராசரியாக 8 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை பெய்கிறது. இரு பருவமழைக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கும். அதாவது, தென்மேற்கு பருவமழை முடிந்து 3 நாட்கள் வரை வெப்பம் அதிகம் இருக்கும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவமழை வரும் 20-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கிருஷ்ணகிரியில் 8 செ.மீ., குமாரபாளையம், திருத்துறைப்பூண்டி, பையூரில் 6 செ.மீ., சங்ககிரி, பெரியகுளம், நடுவட்டத்தில் 5 செ.மீ., ராயக்கோட்டை, கூடலூர் பஜார், கேத்தி, தருமபுரி, தளி, சேலம், ஆலங்காயம், மேலாலத்தூர், சங்கராபுரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x