Last Updated : 04 Oct, 2019 03:16 PM

 

Published : 04 Oct 2019 03:16 PM
Last Updated : 04 Oct 2019 03:16 PM

பொள்ளாச்சி அருகே பஞ்சு மில்லில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல், பஞ்சு மூட்டைகள் சேதம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தனியார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல் மற்றும் பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அரசம்பாளையத்தில் இருந்து காரச்சேரி செல்லும் வழியில் அனில் மேத்தா (60) என்பவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லில் தயாரிக்கப்படும் நூல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நூல் மில்லில் ஒரு பகுதியில் நூல் தயாரிக்கத் தேவையான பஞ்சும், மற்றொரு பகுதியில் பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் பண்டல்களாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று (அக்.4) அதிகாலை சுமார் 2.30 மணிக்கு நூற்பாலையில் 25-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நூற்பாலையின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சில் திடீரென்று தீ பிடித்தது. தீ நூற்பாலையின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் வேலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வராததால் கோவை , பொள்ளாச்சி பகுதியில் உள்ள தீயணைப்பு வாகனங்களும் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. மொத்தம் 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 21 தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் பல மணிநேரம் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து ஜேசிபி வாகனமும் வரவழைக்கப்பட்டு பஞ்சுகளை அகற்றி அதன் மீது தண்ணீர் பாய்ச்சி, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல் பண்டல்களும் பஞ்சு மூட்டைகளும் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கிணத்துக்கடவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். நூற்பாலையில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீ தொடர்ந்து எரிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x