Published : 03 Oct 2019 10:39 AM
Last Updated : 03 Oct 2019 10:39 AM

சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு டெங்கு காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கை தீவிரம்; ஆட்சியர் தகவல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ராமன் தெரிவித் துள்ளார்.

கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஆட்சியர் ராமன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்களிடம் டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் விசாரித்தார்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் 180 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 24 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் மேலும் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அந்தந்த ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள், காய்ச்சல் ஏற்பட்டால் போலி மருத்துவர்களை நாடிச் செல்லாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x