Published : 23 Sep 2019 11:10 AM
Last Updated : 23 Sep 2019 11:10 AM

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் 

புதுக்கோட்டை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழு கட்டுக்குள் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் இருந்து டெங்கு காய்ச்சல் குறித்து சில புகார்கள் வருகின்றன. ஆனால் பத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு, டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் உள்ளன. தினந்தோறும் அவற்றைக் கண்காணித்து, அறிக்கையைத் தயார் செய்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்புப் பணியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் முழு கட்டுக்குள் உள்ளது'' என்று தெரிவித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகும் பரிதாபம் தொடர்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியும், மருந்துகளும் கிடையாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறாவிட்டால் நோயாளிகள் இறக்கக்கூடும்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதற்கு மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் மழைக்காலங்களில் மட்டுமே தற்காலிக கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுப்பதும், நிரந்தரமாக மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுமே டெங்கு பரவ முக்கியக் காரணம் என்ற புகார் எழுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x