Published : 21 Sep 2019 04:14 PM
Last Updated : 21 Sep 2019 04:14 PM

திமுக வேட்பாளர்களை விரட்டியடித்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: கோப்புப்படம்

சென்னை

பொய்யான வாக்குறுதி அளித்த திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் எனவும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (செப்.21) தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக வெற்றியின் படிக்கட்டைத் தொட்டுவிட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் வெற்றியின் சிகரத்தைத் தொடுவோம். திமுக வேட்பாளர்களை விரட்டியடித்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். இது உறுதி.

கடந்த மக்களவை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக தங்களை ஏமாற்றிவிட்டதாக மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அதற்கு சரியான பாடத்தை இந்த இடைத்தேர்தல்கள் உணர்த்தும்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி ஒரு வெற்றியே அல்ல. நாங்கள் பெற்ற தோல்வி, வெற்றிகரமான தோல்வி.

மக்களின் மனமாற்றத்தை இந்த இடைத்தேர்தல்களில் பார்க்கலாம். உண்மையைச் சொல்லும் கட்சி அதிமுக என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்," என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x