Published : 19 Sep 2019 12:59 PM
Last Updated : 19 Sep 2019 12:59 PM

அமித் ஷா தனது கருத்தை மாற்றியதற்கு திமுகவின் போராட்ட அறிவிப்பும் ஒரு காரணம்: திருமாவளவன்

சென்னை

அமித் ஷா தனது கருத்தை மாற்றியதற்கு திமுகவின் போராட்ட அறிவிப்பும் ஒரு காரணம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி நாள் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" எனத் தெரிவித்தார்.

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் பலரும் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தித் திணிப்புக்கு எதிராக வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராஞ்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, "இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்றால் இந்தி கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் நான் கூறினேன். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்தே வந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார். இதன் மூலம் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே அமித் ஷாவின் விளக்கத்தையும் ஆளுநரின் பேச்சையும் ஏற்ற திமுக தனது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "திமுகவின் போராட்ட அறிவிப்புக்குப் பின்னரே, அமித் ஷாவின் நிலைப்பாட்டில் பின்வாங்கலும் தடுமாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.

அமித் ஷா, 'நான் அப்படி சொல்லவில்லை, நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். அமித் ஷா தனது கருத்தையே மாற்றிக் கொண்ட நிலைக்கு, திமுகவின் போராட்ட அறிவிப்பும் ஒரு காரணம். அமித் ஷாவின் பின்வாங்கலில்தான் திமுகவின் போராட்டப் பின்வாங்கலும் அமைந்திருக்கிறது.

வெறுமனே ஆளுநர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே போராட்டம் தள்ளி வைக்கப்படவில்லை. மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அமித் ஷா தனது கருத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே இந்தித் திணிப்புக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது" என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x